Tuesday, September 28, 2010

சித்தர் வழியில்..-சிவ வாக்கியர் #3

சிவ வாக்கியர் தினம் மூங்கில் பிளப்பதும்,
முறம், கூடைகள் செய்வதும் பார்த்து ஆச்சரிப்பட்டார்
கொங்கண சித்தர். அவருக்கு ஏதாவது உதவி
செய்ய விரும்பினார். ஒருநாள் சிவ வாக்கியர்
குடிசையில் இல்லாத நேரத்தில் கொங்கணவ
சித்தர் சென்றார். குடிசையில் சிவ வாக்கியர்
மனைவி மட்டுமே இருந்தார்.

’’வீட்டில் ஏதாவது உபயோகமில்லா இரும்புத்
துண்டு இருந்தால் கொண்டு வா அம்மா’’ என்று
கேட்டதும் சிவ வாக்கியாரின் மனைவி வீட்டில்
கிடந்த சில இரும்புத் துண்டுகளைக்
கொண்டுவந்து கொடுத்தார். கொங்கணவர்
அந்த இரும்புத்துண்டுகளை எல்லாம் தங்கமாக
மாற்றிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து மறைந்தார்.

சிவ வாக்கியர் வீடு திரும்பி வந்தபோது அவரது
மனைவி கொங்கணவர் வந்து போனதை கூறியபடி
தங்கக் கட்டிகளைக் கொண்டு வந்து முன்னால்
கொட்டினாள். சிவ வாக்கியர் அதனைக் கண்டு
திடுக்கிட்டு, கொங்கணவச் சித்தர் தன்னை
சோதிக்கிறா அல்லது அன்பின் மேலீட்டால்
இப்படி செய்தாரா என்று திகைத்தார்.
”” இந்த ஆட்கொல்லியை ஒரு நிமிடம் கூட
இந்த குடிசைக்குள் வைத்திருக்காதே,
ஏதாவது பாழும் கிணற்றில் போட்டுவிடு.
ஆட்கொல்லி…, ஆட்கொல்லி”” என்றார்
சிவ வாக்கியர்.அதைக் கேட்ட அவருடைய
மனைவி மறுபேச்சு எதுவும் பேசாது
தங்கத்தைக் கொண்டு போய் கிணற்றில் போட்டாள்.

பின்னொரு நாளில் நடுப்பகலில் சூரியன்
சுட்டெரித்துக்கொண்டிருந்த சமயத்தில்
ஒரு பாறையின் மீது சிறுநீர் கழித்து விட்டு
தன்னுடைய மனைவி அழைத்து,
‘’இந்த பாறையின் மீது தண்ணீரைக் கொட்டு”
என்றார். அவளும் தண்ணீரை அந்தப் பாறையின்
மீது ஊற்றிய போது குப்பென்று புகை கிளம்பி மறைந்தது.

அந்த பாறை தங்கமாக மாறியது.
சிவ வாக்கியர் சித்தரின் சிறுநீர் இரசவாத
தன்மை பெற்றதால் அந்த மாயம் நிகழ்ந்தது.

சிவ வாக்கியர் தன் மனைவியைப் பார்த்து
”கொங்கணவர் கொடுத்தது சிறிய தங்கத்துண்டு.
இதோ வேண்டிய அளவு தங்கத்தை வெட்டி
எடுத்துக்கொள் “ என்றார்.

“சுவாமி, உங்களுக்கு நான் மனைவியாகிய
பின்பு தங்கம் எனக்கு எப்படி உயர்ந்த பொருளாகும்.
என்னைப் பொருத்தமட்டில் இது ஆட்கொல்லிதான்.
எனக்கு வேண்டாம்” என்று கூறிவிட்டாள்.

ஞானமார்க்கத்தில் திகழ்ந்த சிவ வாக்கியரை
சுற்றி புதிய சீடர்கள் நாளும் தேடி வந்த
வண்ணமிருந்தனர். தேடி வந்த சீடர்கள்
எல்லாம ஞானம் பெறுவதை விட தங்கம்
தேடியதே அதிகம். திரும்ப திரும்ப இரசவாத
வித்தை அறியவே விரும்பினர். இதனால் அவர்
மிகவும் மனம் வருந்தினார்.

“உங்களுடைய ஆவல் எல்லாம் எனக்கு புரிகிறது.
இரசவாத வேதியல் இரகசியங்களைப் பற்றி
அறியவே விரும்புகிறீகள். கடும் தவத்தாலும்
யோகத்தாலும்தான் இது சித்திக்கும்” என்றார்.

”அப்படி என்றால் குருநாதரே! எங்களுக்கு
அந்த இரசவாதம் கைக்கூடும் சாத்தியம் உண்டா?
“தங்கத்தின் மீது பற்றற்றவருக்கே தங்கத்தை
உருவாக்கும் இரசவாதம் சித்தியாகும். சித்தர்கள்
பலருமே இரசவாத வித்தையில் தேர்ந்தவர்கள்தான்.
தாங்கள் அறிந்த அனுபவங்களை எல்லாம் இந்தப்
பிரபஞ்சத்துக்கு காணிக்கையாக அளித்துள்ளார்கள்.
யோக நெறியில் நின்று இரசவாதம் அறிந்தவர்கள்
தேவர்களுக்கு ஒப்பானவர்கள்.தவ வலிமையும்,
யோக நெறியும் உடைய சித்தர்களுக்குதான்
இது சித்திக்கும்”.

”பற்றற்ற சித்தர்களுக்கு அந்த சித்தினால்
என்ன பயன் சுவாமி” என்று மனம் நொந்த
போன நிலையில் ஒரு சீடன் கேட்டான்.

”தங்களது கடும் தவத்தாலும், யோகத்தினாலும்
பெற்ற சித்திகள் அனைத்தும் பலவீன மாந்தருக்காகவே
அர்ப்பணம் செய்துள்ளனர். சித்தரைப் போல
மேன்மை நிலை அடைய நீ விரும்புகிறாயா?
அல்லது பலவீனமான மாந்தர் நிலையே
போதும் என்று கூறுகிறாயா?”

“இரசவாதம் அறியும் சித்தர் போன்ற உயர்நிலை
அடைவதற்கே தங்களிடம் சீடராக வந்துள்ளேன்”
என்றான்.

“அப்படியா! நல்லது. ரஸம் என்பது சிவபெருமானின்
விந்து. உன்னிடம் விந்து இருக்கும் போது சிவன்
விந்துவை ஏன் தேடுகிறாய்? உனக்குள்ளே இருக்கும்
விந்தை மணியாக்கிக் கொண்டால் அற்புதமான
ஆற்றல்களைப் பெறலாம். யோக சாஸ்திரத்தின்
இறுதி நிலை சமாதி. ஒருமுறை இந்தப்
பிரம்மானந்தத்தைச் சுகித்து விட்டால் போதும்.

அவன் இந்தப் பிரம்மானந்தமாகிய பேரின்பத்தில்
திளைத்தவனுக்கு லெளகீக சுகங்கள் துச்சமாகிவிடும்.
இந்தச் சாதகன் விரும்பும் போது அவனுக்கு முக்தி
எனும் ஆன்ம விடுதலை கிடைக்கும். சரி இப்போது
நீ எதனை விரும்புகிறாய்? என்று சிவ வாக்கியர்
கேட்டபோது சீடனின் கண்களில் ஒரு ஒளி தெரிந்தது.

“எனக்கு ரஸமும் வேண்டாம்; தங்கமும் வேண்டாம்,
எனக்குச் சமாதி நிலை சித்திக்க அருள் புரியுங்கள்”

“ மூச்சைக் கட்ட முதலில் பழகு,
“ நடு கால் நிறுத்து.“
’’சகஸ்ராரம் எனும் ஆயிரம் இதழ்த் தாமரையில்
மூச்சை நிறுத்தி “ அதுவே யோகம்’’, -
என்று பயிலும் சாதனையினை சிவ வாக்கியரிடம்
கற்றபோது சீடர்களுக்கு மனமொடுங்கியது.

“ மனம் பழுத்தால் பிறவி தங்கம் –
மனம் பழுக்காவிட்டால் பிறவி பங்கம் –
தங்கத்தை எண்ணிப் பங்கம் போகாதே
தங்க இடம் பாரப்பா …..”

ஆட்கொல்லியை வென்ற சித்தர்

சிவவாக்கியர் தொடர் நிறைவு.
வணக்கம்
அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை

சித்தர் வழியில்...- சிவ வாக்கியர் #2

” வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லையா அம்மா? ”
என்று சிவ வாக்கியர் கேட்டார். ”அய்யா, தாங்கள் யாரென்று
தெரியவில்லை. என்னுடைய பெற்றோர்கள் கூடைமுடைய
மூங்கில் வெட்டப் போயிருக்கிறார்கள்.”
“ பெண்ணே! நான் சாப்பிட்டு பலநாள் ஆகிவிட்டது.
எனக்கு பசி அதிகமாக இருக்கிறது. என்னிடம் பேய்ச்
சுரைக்காயும் மணலும் இருக்கிறது.
இவற்றைச் சமைத்து எனக்கு உணவு பரிமாற முடியுமா ?
என்று சிவ வாக்கியர் கேட்டபோது பதிலேதும்
கூறாது அவரிடமிருந்து அதனைப்பெற்றுக்கொண்டு
உள்ளே சென்றாள்.

ஏளனமாக ஏதும் கேள்வி கேட்காமல்
பரிபக்குவ நிலையில் பேய்ச்சுரைக்காயையும்
மணலையும் பிசைந்து எவ்விதக் குறைபாடும்
இல்லாமல் சமைத்து வைத்து அவரைச்
சாப்பிட அழைத்தாள்.

குருநாதர் அடையாளம் காட்டிய பெண்
இவள்தான் என்று தெரிந்து கொண்டார்.
வீடு திரும்பிய பெற்றோர்கள் வீட்டிற்குள்
சிவ வாக்கியர் உடகார்ந்து இருப்பதைப்
பார்த்துவிட்டு திகைத்தபோது, அந்தப்
பெண் நடந்ததைக் கூறினாள்.

பேய்ச்சுரைக்காயும் மணலும் உணவாக்கப்
பட்டதை அறிந்த அவர் ஒரு சித்தராக
இருக்க வேண்டும் என்று கருதினார்.

”அய்யா, நீங்கள் இல்லாத நேரத்தில்
உங்கள் பெண் நான் கொடுத்த
பேய்ச்சுரைக்காயும் மணலை அற்புதமான
உணவு படைத்தாள். எதிர்வாதம் செய்வதை
அறியாத ஒரு பொறுமையான பெண் இவள்
என்பதை அறிந்தேன்.

நான் தவம் செய்வதற்கு துணையாக
இவள் இருப்பாள் என நிரூபித்துவிட்டாள்.
இவளை நான் மணம் செய்ய
விரும்புகிறேன்” என்றார்.

“சுவாமி, நாங்கள் செய்த புண்ணியம் அது,
ஆயினும் எங்கள் குல வழக்கப்படி
திருமணத்திற்குப் பின்பும்
தாங்கள் எங்களுடன் தங்கி இருக்கவேண்டும்” – என்றனர்.

சிவ வாக்கியர் மறுப்பு ஏதும் சொல்லாமல் ஒப்புக்
கொண்டார். வெண்கலத்தைத் தட்டி ஓசை
எழுப்பி திருமணத்தை அங்கேயே நடத்தி
வைத்தார்கள். குடும்ப வாழ்க்கையை மேற்கொண்ட
போதும் ஆசைகள் அற்ற, நிலையில்தான் இருந்தார்.

குறவர் குலத்தோடு ஐக்கியமான பின்
அவர்களுக்குரிய வேலைகளான, பாசி பவளமணி
சேகரித்தல், காடுகளுக்குச் சென்று மூங்கில்
வெட்டி முறம் செய்தல் போன்ற வேலைகளை
சிவ வாக்கியர் அவர்களோடு
சேர்ந்து செய்து வந்தார்.

இந்நிலையில் ஒருநாள் மூங்கில் வெட்டுவதற்குக்
காட்டினுள் சென்ற போது, அங்கிருந்த ஒரு பருத்த
மூங்கில் மரத்தினை கண்டு அதனை வெட்டினார்.

அப்படி வெட்டியபோது வெட்டப் பட்ட இடத்திலிருந்து
பொடிபொடியாகத் தங்க துகள்கள் உதிர்வதைக் கண்டு
திடுக்கிட்டு போனார் சிவ வாக்கியர்.

{ வேறு சில குறிப்புகளில், சிவ வாக்கியர்
ஒரு புற்றின் மீது சிறுநீர் கழித்த போது அந்த புற்றின் மண்
பொன்னாக மாறியது… என்றுமிருக்கிறது.
சித்தர்களின் சிறுநீருக்கு இரசவாத தன்மை இருக்கிறது

சில ஆண்டுகளுக்கு முன் வேலூரை அடுத்திருக்கும் ஒரு சிறிய கிராமத்திற்கு ( குடியார்த்தம் என்று எண்ணுகிறேன்)
ஒரு சித்தரை காணச் சென்றிருந்தேன்.
அவருக்கு பெரிய வீடு இருந்த போதும் தோட்டத்தில்
ஒரு சிறு குடிசையில்தான் இருந்தார். அவரிடம்
பேசிக்கொண்டு இருந்த போது தான் படுத்திருந்த
கட்டிலின் கீழிருந்து ஒரு பாத்திரை எடுத்தார்.
அதனுள் சிறிது செப்பு தகடும், தண்ணீரும் இருந்தது.

என்னிடம் கொடுத்து முகர்ந்துப் பார்க்க சொன்னார்.
முகர்ந்து பார்த்த போது எனக்கு இளநீரின் வாசம்
அடித்தது. அவரிடம் இளநீர் வாசகம் வருகிறது.
அப்படியா என்று வாங்கி வைத்துவிட்டு, சில நிமிடங்கள்
என்னை உற்று நோக்கினார். பிறகு மெல்ல’….,
“ அது இளநீர் தண்ணீரில்லை …, எனது சிறு நீர். உள்ளீருக்கும் செப்பு
தகடு சில காலத்தில் மெல்ல பொன்னாக மாறும்…, என்றார்.

முன்னமே இம்மாதிரி விடயங்கள் அறிந்திருப்பதால்
அது குறித்து கேட்காமல்…, நல்லது சாமி, -
இது 24 கேரட் தங்கமா அல்லது 22 கேரட் தங்கமாக என்றேன்.
இல்லை அதனை விட சற்று குறைவான கேரட் தங்கம் - என்றார் ]

”சிவபெருமானே! ஆட்டைக் கொண்டு வந்து காட்டி
வேங்கைப் புலியைப் பிடிப்பது போல் தங்கத்தைக்
என்னை கட்டிப் போட எண்ணுகிறாயா? இது ஆட்கொல்லி
அல்லவா, நான் வேண்டுவது முக்தி! அதனை
விடுத்து புத்தியைத் தடுமாறச் செய்யும் இந்த
யுத்தி வேண்டாம்” என சிவ வாக்கியர் தூரமாய் போய் நின்றார்.

ஆடுகாட்டி வேங்கையாய் அகப்படுத்து மாறுபோல்
மாடுகாட்டி என்னை நீ மதிமயக்கல் ஆகுமோ
கோடுகாட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா
வீடுகாட்டி என்னைநீ வெளிப்படுத்த வேணுமே.

இதனை அருகில் நின்ற நான்கு இளையர்கள்,
‘அய்யா, மூங்கில் காட்டுக்குள் எதனைக்கண்டு
இப்படி அச்சத்துடன் ஓடி நின்கிறீர்கள்?’’
என்று கேட்டனர்.

‘’ நான் ஒரு மூங்கிலை வெட்டியபோது
அதற்குள்ளிருந்து ஆட்கொல்லி பூதம் வந்தது.
அதனைக் கண்டுதான் பயந்து ஓடிவந்தேன்”
என்று தங்கமிருந்த இடத்தினைக் காட்டினார்.

’சரியான பைத்தியக்காரன் போலும் இவன்.
தங்கத்தின் மதிப்பறியாதவன்” என்று எண்ணி
‘’ஆமாம் ! இது ஆட்கொல்லிதான். உன்னையும்
கொன்றுவிடும். உடனே இங்கிருந்து நில்லாது
ஓடி விடவும்” என்றனர். சிவ வாக்கியர் வீடு
திரும்பிவிட்டார்.

சிவ வாக்கியர் சென்றதை பார்த்த அந்த
நான்கு இளைஞர்களும் தங்கத்தை மூட்டைக்
கட்டினாரகள். அதற்குள் இருட்டி விட்டது.
இரவு வந்த பின் தங்கத்தை ஊருக்குள் கொண்டு
போகலாம் என்று திட்டமிட்டனர். இருவர் பக்கத்து
ஊருக்குப்போய் பசிக்கு ஏதாவது உணவு வாங்கி
வருவதென்றும், மற்ற இருவர் தங்கத்துக்குக்
காவல் இருப்பதென முடிவாகியது.

பக்கத்து ஊருக்கு சென்றவர்கள் மொத்த
தங்கத்தை தாங்கள் இருவரும் பிரித்துக்கொள்ள
எண்ணினர். வாங்கி வரும் உணவில் விஷத்தைக்
கலந்து காட்டிலிருக்கும் இருவரையும்
கொன்றுவிட தீர்மானித்தனர்.

காட்டில் காவலிருப்பவர்கள் அந்தத் தங்கத்தை
தாங்கள் இருவரும் பங்கிட்டுக்கொள்ள
எண்ணம் கொண்டு, அவர்கள் வந்தவுடன் மறைந்திருந்து
தாக்கிக் கொல்ல முடிவு செய்தனர்.

எண்ணியபடி உணவு வாங்கி வந்த நண்பர்களை
மறைந்திருந்து தாக்கிக் கொன்றனர். பிறகு அவர்கள்
கொண்டு வந்த விஷம் கலந்த உணவினை
உண்டு பிணமானார்கள்.

காலையில் மூங்கில் வெட்டவந்த சிவவாக்கியர்
அந்த நான்கு பிணங்களையும் பார்த்து அந்த
ஆட்கொல்லி நான்கு பேரையும் கொன்றுவிட்டதே
என்று வருந்தியபடி அங்கிருந்து அகன்றார்.

முற்றிலும் ஆசை அறுத்த ஞானியாக
சிவ வாக்கியர் இருந்தார். சித்தர்கள் ஞான நிலை
எய்தும்போது இந்த பிரபஞ்ச இரகசியம்
அனைத்தும் திரை அகன்று விடுகிறது.
அகக்கண் விழிக்கும்போது புறக்கண்ணுக்குப்
புலனாகதது எல்லாம் புலப்படுகிறது. பொய்யான ஆச்சாரங்களையும்,போலியான அனுஷ்டங்களை
சிவ வாக்கியர் வெறுத்தார். கடவுள் உன்னுள்
இருக்கிறார் வெளியில் தேடி திரியாதே என்று பாடியுள்ளார்.

ஆடுகின்ற எம்பிரானை அங்குமிங்கும் என்றுநீர்
தேடுகின்ற பாவிகாள் தெளிந்ததொன்றை ஓர்கிலீர்
காடு நாடு வீடு வீண் கலந்து நின்ற கள்வனை
நாடிஓடி உம்முளே நயந்துணர்ந்து பாருமே.

சிவவாக்கியர் ஒருநாள் கீரையைப் பிடுங்கும்
போது ஆகாய வீதிவழியே கொங்கணவச்
சித்தர் கனக மார்க்கத்தில் போய்க்கொண்டிருந்தார்.
சிவ வாக்கியரின் தவ ஒளியால் கவரப்பட்ட
கொங்கணவ சித்தர் அந்தக்காட்டில் கீழே
இறங்க இருவரும் மகிழ்ந்து உரையாடினார்.
சிவ வாக்கியரின் மகா சித்துக்களை நன்கறிந்த
கொங்கணவச் சித்தர். அதன்பின் அங்கே இறங்கி
சிவ வாக்கியரிடம் உரையாடி செல்வார்.
(தொடரும்)
வணக்கம்
அன்பொடு,
கிருஷ்ணன்
சிங்கை